1972 ம் ஆண்டு, செப்டம்பர் 5.
‘உலக அமைதிக்காக நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ்’ என களமிறங்கிய ஜெர்மனிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அமைதியை உருகுலைக்க ஒரு தீவிரவாத இயக்கம் அங்கே ஊடுருவியிருப்பதை ஜெர்மனி மட்டுமல்ல, உலக நாடுகளே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
‘ப்ளாக் செப்டம்பர்’ எனும் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் ஊடுருவல் தான் அது. உண்மையில் ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர் ப்ளாக் செப்டம்பர் அமைப்பினர். 1972 ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் அறிவிப்பு, அவர்களுக்கு பாலில் விழுந்த பலாச்சுளை என்றானது.
ப்ளாக் செப்டம்பர்… யார் இவர்கள்?
இதைத் தெரிந்து கொள்ள உலகின் தொன்மையான நகரமான ஜெருசலேமில் இருந்து தொடங்குவது சிறப்பு.
எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா என சுற்றிலும் மத்தியக் கிழக்கு பெருநகரங்கள் சூழ, மெடிட்டரினியன் கடலின் அருகே இருக்கும் பாலஸ்தீன நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஜெருசலேம் ( இப்போது இஸ்ரேலின் தலைநகர் ). புனித பூமியான இதை, உலகின் மூன்று முக்கிய மதங்கள் சொந்தங் கொண்டாடின.
கிறிஸ்தவர்கள் இதை குழந்தை யேசு வளர்ந்த இடம் எனவும், யூதர்கள் இதை அப்ரஹாம் பிறந்த இடம் எனவும், முஸ்லிம்கள் இதை நபிகள் நாயகம் சொர்க்கத்தை அடைந்த இடம் எனவும் நம்பினர். ஆக இங்கிருந்து ஆரம்பமானது சிக்கல்கள்.
இன்று நடக்கும் பாலஸ்தீன் இஸ்ரேல் போர்களுக்கும் அடிப்படைக் காரணம் இது தான் எனச் சொல்லலாம். அதாவது ‘மதம்’.
சரி, இதற்கும் ப்ளாக் செப்டம்பர் அமைப்பிற்கும் என்ன சம்பந்தம்?
பார்ப்போம்…
வரலாற்றில் யூதர்களுக்கு எப்போதுமே ஒரு கரிசனப் பார்வை உண்டு. தங்களுக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவு.
ஆனால் தனி நாட்டிற்கு எங்கே போவது?
அட! இருக்கவே இருக்கிறது ஜெருசலேம். அதாவது பாலஸ்தீன நிலப்பரப்பு.
தனி நாடு என்ற ஆசை, கோரிக்கை ஆனது. கோரிக்கை, போராட்டம் ஆனது. போராட்டம், போர் ஆனது. போரின் முடிவில் இஸ்ரேல் என்ற புதிய நாடு 1948 ல் உதயமானது.
இப்படி பாலஸ்தீன நிலப்பரப்பில் இருந்து தனியே பெயர்ந்து வந்தது தான் இப்போதைய இஸ்ரேல். 1948 க்கு முன்பு இஸ்ரேல் என்ற தனி நாடு ஒன்று இல்லவே இல்லை.
இப்படி இஸ்ரேல் உருவாக, மீதியிருக்கும் நிலம் பாலஸ்தீன் என்றானது. அதில் இருந்த அரேபியர்கள், பறிக்கப்பட்ட தங்களது உரிமைகளை மீட்க ஒரு சரியான தலைமைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
தலைமை கிடைக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் முளைத்தனர். அவர்களின் ஒரே நோக்கம் இஸ்ரேலை வேரறுப்பது. அவர்கள் தான் ‘ப்ளாக் செப்டம்பர்’.
1948 க்குப் பிறகு தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் சிறிய சிறிய போர்கள் நடந்து கொண்டிருக்க, உள்நாட்டு சண்டையை உலகறிய செய்ய வேண்டும் என நினைத்தது ப்ளாக் செப்டம்பர். அதற்காக அவர்கள் தேர்வு செய்தது, 1972 ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ்.
ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள வந்தவர்கள், ஜெர்மனியின் ‘முனிச்’ என்ற தனி ஊரில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் பாதுகாப்பிற்கான (?) முழு பொறுப்பையும் ஜெர்மனி ஏற்றிருந்தது.
கோலாகலமாக தொடங்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்க, நடந்ததோ வேறு. எட்டு பேர் கொண்ட ப்ளாக் செப்டம்பர் தீவிரவாதிகள் முனிச்சை கைப்பற்றினர். இஸ்ரேல் வீரர்களை பிணை கைதிகளாக்கி, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சிறை வைத்தனர். அப்போது குர்ட் ஸ்ரம்ஃப் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
தீவிரவாதிகளுள் ஒருவன், வித்தியாசமான முகமூடி ஒன்றை அணிந்தபடி பால்கனியில் நிற்கும் இந்தப் புகைப்படம் பிரபலம். ‘முனிச் படுகொலை‘ என அறியப்படும் இந்த சம்பவத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்தப் புகைப்படம், பார்ப்பதற்கு சற்று திகிலூட்டும் விதமாகவே இருக்கும்.
பதினோரு அப்பாவி இஸ்ரேல் ஒலிம்பிக்ஸ் வீரர்கள், ஒரு முனிச் போலீஸ் அதிகாரி, ஐந்து ப்ளாக் செப்டம்பர் தீவிரவாதிகள் என மொத்தம் பதினேழு பேர் இதில் கொல்லப்பட்டனர். பாதுகாப்பில் கோட்டைவிட்ட ஜெர்மனி அரசின் மீது இன்றளவும் இருக்கும் கரும்புள்ளி இது.
சரி, பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் இத்துடனாவது முடிவிற்கு வந்ததா?
நீங்கள் படிக்கும் அன்றாட தினசரி நாளிதழில், இதற்குண்டான விடையை தேடிக் கொள்ளலாம்.
சரத்
(09.09.2020)
5 comments
Arumai sago, new informations
Nanri sago
Short ,sweet and informative
Varalaaru உருவாகிறது…
Thank you mam